நள்ளிரவில் கர்ப்பிணியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வேன் விபத்தில் சிக்கியது


நள்ளிரவில் கர்ப்பிணியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வேன் விபத்தில் சிக்கியது
x
தினத்தந்தி 15 May 2018 10:30 PM GMT (Updated: 15 May 2018 9:29 PM GMT)

காரிமங்கலம் அருகே கர்ப்பிணியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வேன் நள்ளிரவில் விபத்தில் சிக்கியது. இதனால் டிரைவர் அந்த கர்ப்பிணி யை மாற்று ஆம்புலன்ஸ் வேன் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தார்.

காரிமங்கலம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் சப்பாணிப்பட்டியை சேர்ந்தவர் சத்தியப்பிரியா(வயது 23). 8 மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்றுமுன்தினம் இரவு வயிறு வலிப்பதாக கூறி காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து வந்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர், அவருக்கு ரத்த அழுத்தம் சற்று கூடுதலாக இருப்பதாக கூறி அவரை மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரை செய்தார்.

அதனால் காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சத்தியப்பிரியா தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேனை அரூர் தாலுகா கே.கொல்லப்பட்டியை சேர்ந்த ரகு என்பவர் ஓட்டி சென்றார். அந்த ஆம்புலன்ஸ் வேன் நள்ளிரவு பெரியாம்பட்டி தனியார்் பொறியியல் கல்லூரி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று அடையாளம் தெரியாத லாரி ஒன்று ஆம்புலன்சின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் ரகு உடனடியாக காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் மாற்று ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கர்ப்பிணியை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்க உதவினார்கள்.

இந்த விபத்து குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் ரகு காரிமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர். ஆம்புலன்ஸ் டிரைவர் ரகுவின் உடனடி செயல்பாட்டால் ஒரு கர்ப்பிணி காப்பாற்றப்பட்டதை அறிந்த காரிமங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் டிரைவர் ரகுவை பாராட்டினர்.


Next Story