பந்தப்பிழா- பொன்னானி சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி


பந்தப்பிழா- பொன்னானி சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 15 May 2018 10:57 PM GMT (Updated: 15 May 2018 10:57 PM GMT)

பந்தப்பிழா- பொன்னானி இடையே செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா பந்தப்பிழா பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர ஆதிவாசி மக்களும் உள்ளனர். இங்கு அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இப்பகுதி மக்கள் தங்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொன்னானி பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பந்தப்பிழாவில் இருந்து பொன்னானிக்கு சுமார் 3 கி.மீட்டர் தூரத்துக்கு மண் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சாலைமழைக்காலத்தில் நடந்து செல்ல முடியாத நிலையில் இருந்தது. மேலும் வாகனங் கள் இயக்க முடியாமல் இருந்தது. பின்னர் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைக்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு தார்சாலையாக மாற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

தற்போது சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதில் மழைநீர் நிரம்பி குளம்போல் காட்சி அளிக்கிறது. அவசர தேவைகளுக்காக வாகனங்களை வேகமாக இயக்க முடிவது இல்லை. நோயாளிகள், கர்ப்பிணிகளை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாத நிலை தொடருகிறது. இவ்வாறு அனைத்து தரப்பினரும் பழுதடைந்த சாலையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதே சாலையின் குறுக்கே ஆறு செல்கிறது. இதன் மீது சிமெண்டு பாலம் அமைக்கப் பட்டு உள்ளது. ஆனால் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கப்பட வில்லை. இதனால் வாகனங்கள் அடிக்கடி ஆற்றுக்குள் விழுந்து விடுகிறது. மேலும் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளும் தவறி ஆற்றுக்குள் விழுந்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும். பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story