சேறும் சகதியுமாக மாறியுள்ள தேனி வாரச்சந்தைக்கு விடிவு காலம் பிறக்குமா? வியாபாரிகள்-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சேறும் சகதியுமாக மாறியுள்ள தேனி வாரச்சந்தைக்கு விடிவு காலம் பிறக்குமா? வியாபாரிகள்-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 15 May 2018 11:34 PM GMT (Updated: 15 May 2018 11:34 PM GMT)

தேனி வாரச்சந்தை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. சந்தையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

தேனி,

தேனி நகரில் வாரச்சந்தை அமைந்து உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு சந்தை நடந்து வருகிறது. மற்ற நாட்களில் சந்தை வளாகத்தில் வாழைப்பழம், வாழை இலை விற்பனை நடந்து வருகிறது.

தேனி என்ற பெயர் உருவாக காரணமாக இந்த சந்தை திகழ்கிறது. அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஓரிரு வீடுகள் மட்டுமே இருந்தன. மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள் கூடும் இடமாக இந்த சந்தை இருந்தது. தேனீக்கள் பூக்களில் இருந்து தேன் எடுத்துவிட்டு, தேன் கூட்டில் கூடுவது போல், விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்களை கொண்டு வந்து கூடும் இடமாக இந்த சந்தை திகழ்ந்தது. இதனால், தேனி என்ற பெயர் பெற்றது.

இது, தமிழகத்தில் 2-வது பெரிய வாரச்சந்தை என்ற சிறப்பை பெற்றது. பரந்து விரிந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த சந்தையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. சுகாதாரகேட்டில் சிக்கி உள்ளது. அத்துடன் இங்கு வியாபாரம் செய்வதற்கு என்று கடைகள் வசதி கிடையாது. ஒவ்வொரு வாரமும் தற்காலிக கொட்டகை அமைத்து வியாபாரம் நடக்கிறது.

காய்கறி, பழங்கள், கருவாடு, பருப்பு, தானியங்கள், மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து விதமான பொருட் களும் இந்த சந்தையில் கிடைக்கும். ஒரு காலத்தில் ஆடு, மாடுகள் விற்பனையாகும் சந்தையாக இருந்தது. நாளடைவில் கால்நடைகள் விற்பனை இங்கு நடத்துவது நின்றுவிட்டது.

இந்த வாரச்சந்தை சாரல் மழை பெய்தாலே சாக்கடையாக மாறும் நிலையில் உள்ளது. தேனியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வாரச்சந்தை வளாகம் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பரிதவிப்பை ஏற்படுத்தும் வகையில் வாரச்சந்தையில் ஆங்காங்கே குட்டைபோல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

ஒவ்வொரு முறை மழை பெய்தாலும் இதே நிலைமை தான் நீடிக்கிறது. வாரச்சந்தையில் கடைகள் கட்டிக் கொடுத்து, குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து சந்தையை மேம்படுத்த வேண்டும் என்பது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ஆனால், இங்கு சந்தை மேம்பாட்டுக்கான எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, சந்தை பகுதியை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு சந்தைக்கு விடிவு காலம் பிறக்குமா? என பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

Next Story