நரிக்குடி அருகே கிருதுமால் நதியில் சர்வசாதாரணமாக நடக்கும் மணல் திருட்டு


நரிக்குடி அருகே கிருதுமால் நதியில் சர்வசாதாரணமாக நடக்கும் மணல் திருட்டு
x
தினத்தந்தி 15 May 2018 11:35 PM GMT (Updated: 15 May 2018 11:35 PM GMT)

நரிக்குடி அருகே கிருதுமால் நதியில் சர்வசாதாரணமாக மணல் கடத்தப்படுகிறது.

காரியாபட்டி,

மாவட்டத்திலேயே நரிக்குடி ஒன்றியம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்தப் பகுதியில் பல வருடங்களாக மழையின்றி விவசாயம் நடைபெறாமல் பல கிராமத்தினர் பிழைப்பை தேடி வெளி மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். இந்தப் பகுதியில் எந்தவித தொழிற்சாலைகளும் இல்லை. பல ஆண்டுகளாக நரிக்குடி பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகவே இருந்து வருகிறது. மேலும் நரிக்குடி ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நரிக்குடி பகுதியின் வாழ்வாதாரமாக இருந்து வந்த கிருதுமால் நதி தூர் வாரப்படாமல் இருந்து வந்தது. இந்த நதியில் தண்ணீர் வந்தால் 30-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும். பாசன சங்க நிர்வாகிகள் நதி தூர்வாரப் பட வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தி ஒரு வழியாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுமார் ரூ.80 கோடி மதிப்பீட்டில் கிருதுமால் நதியை தூர்வார தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இதனடிப்படையில் கிருதுமால் நதி தூர் வாரப்பட்டது. தூர் வாரப்பட்ட பின்பு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வீர சோழன் கிராமம் வரை தண்ணீர் வந்தது. இதற்கிடையில் நதியில் ஆங்காங்கே மணல் திருடப்பட்டு வருகிறது. தற்போது நரிக்குடி நாலூர் கிராமம் அருகே கிருதுமால் நதியின் குறுக்கே புதிதாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அருகே இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டு மதுரை, காரியாபட்டி பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மணல் திருட்டு சர்வசாதாரணமாக அமோகமாக நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் காவல்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் சவால் விடும் வகையில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாலூர் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபடும் கும்பலை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தாலும் உரிய பலன் கிட்டவில்லை.

மணல் திருடப்பட்டு வருவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். கிருதுமால் நதியை தூர் வாரியதன் நோக்கமே நரிக்குடி பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். ஆனால் மணல் திருடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கெடுத்து வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும். 

Next Story