மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு டிரைவருக்கு 10 ஆண்டு சிறை


மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 15 May 2018 11:52 PM GMT (Updated: 15 May 2018 11:52 PM GMT)

டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ஈரோடு,

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கரூர் கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடி வீரணாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பணன். இவருடைய மகன் திருப்பதி (வயது 23). பொக்லைன் டிரைவராக உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைக்காக சென்றபோது அங்குள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சிவசங்கிரி (21) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

அவர்கள் 2 பேரும் கடந்த 4-6-2014 அன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் ஈரோடு திண்டல் மாருதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

திருப்பதிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதால் அவருக்கும், சிவசங்கிரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. கடந்த 7-1-2015 அன்று வழக்கம்போல் திருப்பதி மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் மனவேதனை அடைந்த சிவசங்கிரி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவியும் மேல்விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டியதாக திருப்பதியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பதியின் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி (பொறுப்பு) ராமகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக திருப்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார்.

Next Story