திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 15 May 2018 11:52 PM GMT (Updated: 15 May 2018 11:52 PM GMT)

சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், ஒண்டிக்குப்பம், கணேசபுரம், கபிலர் நகர், ஜெல்லிமேடு, கே.கே.நகர், வரலட்சுமிநகர், சண்முகபத்மாவதி நகர் போன்ற 20 நகர்பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது.

நாங்கள் மேற்கண்ட பகுதியில் 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இறப்பு ஏற்படும் சமயத்தில் கூவம் ஆற்றங்கரையோரம் மயான நிலத்தில் உடலை அடக்கம் செய்தும், எரித்தும் வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் சுடுகாட்டுக்கு செல்லும் வழியை மறித்து சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். இதனால் நாங்கள் இறப்பு ஏற்படும் சமயத்தில் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு செல்லமுடியாமல் வழியை மறித்து விட்டார்கள். இதனால் நாங்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யமுடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே மேற்கண்ட பகுதியில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்து அவற்றை அகற்றி சுடுகாட்டிற்கு செல்ல வழிவகை செய்து தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தார்கள். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story