பிளஸ்–2 தேர்வில் 14,531 பேர் தேர்ச்சி; மாநில அளவில் 4–வது இடம்


பிளஸ்–2 தேர்வில் 14,531 பேர் தேர்ச்சி; மாநில அளவில் 4–வது இடம்
x
தினத்தந்தி 16 May 2018 10:15 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 14,531 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 4–வது இடத்தை பிடித்துள்ளது.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வுகள் கடந்த மார்ச் 1–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 13–ந்தேதி வரை நடைபெற்றன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 139 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 7,030 மாணவர்களும், 8,125 மாணவிகளுமாக மொத்தம் 15,155 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர். இதனை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த முடிவுகளின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,630 மாணவர்களும், 7,901 மாணவிகளுமாக 14,531 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக தேர்ச்சி சதவீத அடிப்படையில் மாணவர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி 94.31 சதவீதம், மாணவிகளின் ஒட்டு மொத்த தேர்ச்சி 97.24 சதவீதம் என ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 95.88 ஆகும். மாநில அளவில் இந்த சதவீதத்தில் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் 4–வது இடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 96.77 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2–வது இடம் பிடித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.89 சதவீதம் தேர்ச்சி குறைவாகும். மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் வரிசையில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 3 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 19 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 22 மேல்நிலைப்பள்ளிகளும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 10 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 8 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என 22 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 44 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேம், அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறியதாவது:– கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சிறிய அளவில் குறைந்துள்ளது. இதனை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இதற்கென நியமித்தும், தேவையான பயிற்சி புத்தகங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவழைத்தும் ஆரம்பம் முதலே பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் மருத்துவ கல்விக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story