மணப்பெண் பிடிக்காததால் திருமணத்துக்கு 10 நாட்கள் இருந்த நிலையில் வாலிபர் தற்கொலை


மணப்பெண் பிடிக்காததால் திருமணத்துக்கு 10 நாட்கள் இருந்த நிலையில் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2018 10:15 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

திருமணத்துக்கு 10 நாட்களே இருந்த நிலையில் மணப்பெண் பிடிக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் வளையங்காடு வ.உ.சி.நகரை சேர்ந்தவர் விஜயராஜ். இவருடைய மகன் ராஜசேகர்(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.

ஆனால் அவருடைய காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் அவர் கடந்த சில மாதங்களாக மனமுடைந்து காணப்பட்டார். இதன்காரணமாக ராஜசேகருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவார் என்று நினைத்த அவருடைய பெற்றோர், அவருக்கு பெண் பார்த்து வந்தனர்.

இதன்படி தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 21 வயது பெண்ணை பார்த்து பேசி முடித்தனர். இதைதொடர்ந்து, கடந்த மாதம் ராஜசேகருக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது வருகிற 25–ந்தேதி தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடத்துவது என்று இருவீட்டாரும் முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டது. திருமணத்துக்கு இன்னும் 10 நாட்களே இருந்த நிலையில், மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் தங்கள் உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி, திருமண ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ராஜசேகரின் பெற்றோர், தேனிக்கு புறப்பட்டுகொண்டிருந்தனர். அப்போது, தனக்கு மணப்பெண்ணை பிடிக்கவில்லை. அதனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் அவருடைய பெற்றோர், பெரியவர்கள் எல்லாம் பேசி முடித்து, உறவினர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ் கொடுத்துவிட்டோம். இப்போது திருமணம் நின்றால் நமது குடும்பத்துக்கு தான் அவமானம் என்று கூறி அவரை சமரசம் செய்துவிட்டு தேனிக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் ராஜசேகர் மனமுடைந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜசேகர், வாழ்க்கையில் விரக்தி அடைந்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்ட ராஜசேகர், பின்பு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்த அவருடைய பெற்றோர், தங்கள் மகன் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த 15வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் 15வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணத்துக்கு 10 நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் பிடிக்காமல் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story