தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.8 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க முடிவு அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்


தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.8 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க முடிவு அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 16 May 2018 11:30 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.8 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

குன்னூர்,

நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறை செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று குன்னூரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் கடன் தொகைக்கான காசோலையை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் உடனடியாக திருப்பி செலுத்தப்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் கடன் மட்டுமே வாங்கப்பட்டது. ஆனால் அதனை திருப்பி செலுத்தப்படவில்லை. கூட்டுறவு சங்கங்கள் 100 ஆண்டுகள் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன் அடிப்படையில் 930 பேர் மீது வழக்கு தொடப்பட்டு உள்ளது. கடந்த 2013–ம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்பட்டது. சங்கத்தின் வருவாய்க்கு தகுந்த செலவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் வருவாய் வருமான வரி கட்டும் நிலையில் மேம்பாடு அடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 467 சங்கங்களில் ஒரு சில சங்கத்தில் தான் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனை கண்டறிந்து உடனடியாக கலைக்கப்பட்டது.

விவசாயிகள் உற்பத்தி இருமடங்காகவும், வருமானம் 3 மடங்காகவும் ஈட்டும் பொருட்டு நீலகிரி மாவட்டத்தில் 2011–ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் 31–ந் தேதி வரை 1 லட்சத்து 62 ஆயிரத்து 143 விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் முலம் ரூ.79 ஆயிரத்து 195 கோடி அளவுக்கு வட்டியில்லா பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

2017–18 ஆம் ஆண்டில் மாநில அளவில் ரூ.7 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்கடன் வழங்க வேண்டும் என குறியீடு நிர்ணயிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 31–ந் தேதி வரை 10 லட்சத்து 63 ஆயிரத்து 821 விவசாயிகளுக்கு, ரூ.6 ஆயிரத்து 220 கோடியே 27 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.162 கோடி அளவிற்கு குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் கடந்த மார்ச் மாதம் வரை 15 ஆயிரத்து 321 விவசாயிகளுக்கு, ரூ.132 கோடிய 79 லட்சம் வட்டியில்லா பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

தேயிலை சாகுபடிக்காக மட்டும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 108 விவசாயிகளுக்கு ரூ.602 கோடிய 64 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இங்கு மத்திய கூட்டுறவு வங்கி 22 கிளைகளுடன் செயல்படுகிறது. மாநில அளவில் 291 மருந்தகங்கள் முலம் ரூ.637 கோடியே 76 லட்சம் மதிப்பிலான தரமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எம்.பி.க்கள் அர்ஜூனன், கோபாலகிருஷ்ணன் மற்றும் சாந்திராமு எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் பழனிச்சாமி, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி பயிர்கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் ரூ.6 ஆயிரத்து 300 கோடி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு (2018–2019) ரூ.8 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 810 ரே‌ஷன் கடைகளில் எந்தவித பாகுபாடும் இன்றி பொருட்கள் வழங்கப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களின் எந்தவித முறைகேடும் இல்லை. தேர்தலை தேர்தல் ஆணையம் தான் நடத்துகிறது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்தால் தேர்தல் ஆணையத்திடம்தான் முறையிட வேண்டும். தேர்தலுக்கும், கூட்டுறவு துறைக்கும் சம்பந்தம் இல்லை. ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஒரு ஆண்டுக்கு கூட்டுறவு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மட்டுமே சரியான நேரத்தில தேர்தல் நடத்தப்படுகிறது. கூட்டுறவு சங்க தேர்தலில் சங்க நிர்வாகிகளை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்கிறார்கள். இதில் கட்சி தலையீடு இல்லை.

ஊட்டி டீத்தூள் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி கடந்த மார்ச் மாதம் வரை 22 ஆயிரத்து 560 மெட்ரிக் டன் தேயிலைதூள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ரூ.338 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஊட்டி டீத்தூள் விற்பனையை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த தேயிலையில் சுவைக்காக சிறிதளவு அசாம் தேயிலை கலக்கப்படுகிறது. அதன் விவரம் உணவுத்துறைக்கு மட்டும் தான் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story