திருத்தணி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் அரசு பஸ் சிறைபிடிப்பு


திருத்தணி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் அரசு பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 16 May 2018 10:00 PM GMT (Updated: 16 May 2018 8:05 PM GMT)

திருத்தணி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்தணி,

திருத்தணியை அடுத்த பூனிமாங்காடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வயல்வெளியில் உள்ள கிணற்று நீரை பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதனால் கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். குடிநீர் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று நல்லாட்டூர் – திருத்தணி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர். மறியல் நடந்து கொண்டிருந்த போது மேகலா என்பவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்டு கூனிமாங்காடில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவல் அறிந்ததும் தாசில்தார் நரசிம்மன், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story