ஆத்திரத்தை குறைக்கும் வகையில் கைதிகளுக்கு பயிற்சி அளிக்கலாம் அதிகாரிகளுக்கு கிரண்பெடி ஆலோசனை


ஆத்திரத்தை குறைக்கும் வகையில் கைதிகளுக்கு பயிற்சி அளிக்கலாம் அதிகாரிகளுக்கு கிரண்பெடி ஆலோசனை
x
தினத்தந்தி 16 May 2018 10:00 PM GMT (Updated: 16 May 2018 8:32 PM GMT)

ஆத்திரத்தை குறைக்க சிறை கைதிகளுக்கு பயிற்சி அளிக்கலாம் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஆலோசனை வழங்கினார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி கடந்த சில நாட்களுக்கு முன்பு காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் ஆய்வு நடத்தினார். அப்போது கைதிகளை நல்வழிப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் அவர் காலாப்பட்டு சிறைக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார். அப்போது சிறைத்துறை நடவடிக்கைகளை மேம்படுத்த சிறைத்துறை ஐ.ஜி. பங்கஜ்குமார் ஜாவுக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி சிறையில் உள்ள கைதிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர்களது குற்ற செயல்பாடுகள் குறித்தும், எதற்காக அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டீர்கள் என்பது குறித்தும் கேட்டார். அதில் பெரும்பாலான கைதிகள் ஆத்திரம் மற்றும் முன்விரோதம் காரணமாக குற்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கைதிகளின் ஆத்திரத்தை குறைக்கும் விதமாக பயிற்சி அளிக்க கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார். மாணவப் பருவத்திலேயே ஆசிரியர்கள் கோபம் வராத அளவுக்கு மாணவர்களை பக்குவப்படுத்த வேண்டும். ஆரோவில் குழுவினரிடம் இதற்கான பயிற்சிகளை அளிக்குமாறு உதவி கேட்கலாம், ஆன்மிக குழுக்களை கொண்டும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாம் என்று அதிகாரிகளுக்க கவர்னர் கிரண்பெடி ஆலோசனை வழங்கினார்.


Next Story