போக்குவரத்து போலீசாரின் சீருடையில் நவீன கேமரா பொருத்தம்


போக்குவரத்து போலீசாரின் சீருடையில் நவீன கேமரா பொருத்தம்
x
தினத்தந்தி 16 May 2018 9:11 PM GMT (Updated: 16 May 2018 9:11 PM GMT)

குற்றங்களை கண் காணிக்க வசதியாக பீட் மாவட்ட போக்குவரத்து போலீசாரின் சீருடையில் நவீன கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

பீட்,

பீட் மாவட்டத்தில் சாலை விதி முறை மீறல் மற்றும் குற்ற நடவடிக்கைகளை எளிதில் கண்காணிக்கும் பொருட்டு போக்குவரத்து போலீசாரின் சீருடையில் நவீன கேமராக்கள் பொருத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக மாவட்டத்தின் 10 இடங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின்படி நவீன கேமராக்கள் போலீசாரின் சீருடையில் சட்டை பட்டனில் பொருத்தப்பட்டு போக்குவரத்து போலீசார் யார் யாருடன் என்ன பேசுகிறார்கள் என்பது பதிவு செய்யப்படும். இதனால் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்கும் போலீசாரை கையும் களவுமாக பிடிக்க முடிவதோடு, சாலை விதிமுறைகளை மீறுபவர்களையும் எளிதில் அடையாளம் காணலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து பீட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் கூறியதாவது:-

போலீசாரின் சீருடையில் பொருத்தப்படும் கேமராக்கள் போலீஸ் துறையை தொழில்நுட்ப ரீதியில் நவீனப்படுத்துவதோடு, வெளிப்படைத்தன்மை உடையதாகவும் மாற்றும்.

தங்களது நடவடிக்கை பதிவு செய்யப்படுவது தெரியவந்தால் வாகன ஓட்டிகள் தவறு செய்வதும், போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் கண்டிப்பாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story