3 பாடங்களில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை


3 பாடங்களில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2018 11:00 PM GMT (Updated: 16 May 2018 9:13 PM GMT)

கடத்தூர் அருகே, 3 பாடங்களில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ளது காவேரிபுரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி மங்கம்மாள். இவர்களுடைய மகள் கவுசல்யா (வயது 17). இவர் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வணிகவியல் படித்தார். இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.

அதில் 3 பாடங்களில் கவுசல்யா தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் மாணவி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் விரக்தி அடைந்த கவுசல்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் மாணவியை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story