நெல்லை–தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம்: ‘‘மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்’’ கமல்ஹாசன் ஆவேச பேச்சு


நெல்லை–தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம்: ‘‘மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்’’ கமல்ஹாசன் ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 17 May 2018 9:30 PM GMT (Updated: 17 May 2018 12:37 PM GMT)

நெல்லை–தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன், ‘‘மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்‘‘ என்று ஆவேசமாக பேசினார்.

திருச்செந்தூர், 

நெல்லை–தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன், ‘‘மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்‘‘ என்று ஆவேசமாக பேசினார்.

சுற்றுப்பயணம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவர், நேற்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக அவர் காலை 10 மணி அளவில் நெல்லை மாவட்டம் பணகுடி பஸ் நிலையம் அருகில் திறந்த காரில் வந்தார். அவருக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி நெல்லை மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வள்ளியூர் வழியாக திசையன்விளைக்கு கமலஹாசன் காரில் சென்றார். திசையன்விளை காந்திஜி ரோட்டில் அவர் திறந்த காரில் நின்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

பொதுமக்களை நேரில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்களின் அன்பில் மிதந்து கொண்டு வருகிறேன். உங்களின் அன்பை நேரில் பார்க்கவும், உங்களின் தேவைகளை உணர்ந்து கொள்ளவும், இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். என்னை 50 ஆண்டுகளாக திரையில் பார்த்து மகிழ்ந்து இருப்பீர்கள். நான் உங்களை நேரில் பார்ப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சுற்றுப்பயணம் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என்று கருதி விடாதீர்கள். உங்களை சந்திக்க அடிக்கடி வருவேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

பின்னர் உவரி அந்தோணியார் ஆலயம் பஸ் நிறுத்தம் அருகில் திறந்த வேனில் நின்று கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பெரிய மனது கொண்ட மனிதர்களை சந்திக்க...

எனக்கும், இந்த ஊருக்கும் பெரிய தொடர்பு உள்ளது. பாபநாசம் படத்தில் உவரியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். இங்கு இளைஞர்கள், தாய்மார்கள் திரண்டு வந்து வரவேற்று உள்ளனர். சிறிய கிராமங்களில் உள்ள பெரிய மனது கொண்ட சிறந்த மனிதர்களைக் காணவே இந்த சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளேன். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இளைஞர்கள், தாய்மார்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. நமக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை இது காட்டுகிறது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

அப்போது அங்கிருந்த இளைஞர்களில் ஒருவர், எங்கள் ஊருக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்று கமல்ஹாசனிடம் கேட்டார். அதற்கு கமல்ஹாசன், என்ன செய்ய வேண்டும்? என்று கேளுங்கள் என கூறினார்.

பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் திறந்த வேனில் வீதி, வீதியாக சென்றார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கமல்ஹாசன் பேசியதாவது:–

கரத்தை வலுப்படுத்துங்கள்

இங்கு பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இதையெல்லாம் கேள்வி கேட்பதற்குதான் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. நாங்கள் அரசு பொறுப்புக்கு வரவில்லை. அதுவரையிலும் மக்களின் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்து செல்லும் வகையில் செயல்படுவோம். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது கரத்தை வலுப்படுத்துங்கள். மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு எந்த நேரத்திலும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

பின்னர் திருச்செந்தூர் தேரடி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மக்களுக்கு பணி செய்ய...

எனது நற்பணி இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியாக மாற்றி செயல்பட்டு வருகிறோம். சென்னையில் வருகிற 25–ந் தேதியில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடக்கிறது. இதில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நற்பணி இயக்க அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். நமது பாதை எப்போதோ முடிவாகி விட்டது. நமது கட்டமைப்பு குறித்து நேர்காணலில் தெரிவிக்கப்படும்.

நான் சாதி, மதங்களை எதிர்ப்பதாக சிலர் கூறுகின்றனர். நான் மனிதர்களுக்கு இடையூறாக இருக்கும் எல்லா வி‌ஷயங்களையும் எதிர்த்து நிற்கிறேன். நான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன். நான் நேசிப்பது மனிதர்களை மட்டும்தான். அவர்களின் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன். இனி எனக்கு வழங்கப்பட்ட வேலை, எனது எஞ்சிய வாழ்நாட்களில் மக்களுக்கு பணி செய்வது மட்டும்தான். அதனை ஏற்கனவே தொலைக்காட்சியில் தெரிவித்து விட்டேன். அதனை பொதுமக்களிடம் நேரில் கூறுவதற்காக வந்துள்ளேன்.

அகிம்சை ஆயுதம்

சில கட்சியினர் தேர்தல் வரும்போது மட்டுமே பல்வேறு ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். ஆனால் நான் மகாத்மா காந்தி ‘பாரத தர்‌ஷன்‘ சுற்றுப்பயணம் மேற்கொண்டதுபோன்று, சுற்றுப்பயணம் செய்கிறேன். நான் காந்தியை பார்த்தது கிடையாது. ஆனால் அவரது கொள்கைகளை பின்பற்றி வருகிறேன். மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், மக்களின் நன்மைக்கு தடையாக எது வந்தாலும், அதனை தகர்த்து எறிவோம்.

நமது நாடு பல்வேறு பாரம்பரிய பண்பாடுகளைக் கொண்டது. நமது நிலையை மேம்படுத்தி கொள்ள நாம் குரல் கொடுக்க வேண்டும். தற்போது செல்போன்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘மய்யம் ஆப்‘பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது நமது கட்சியின் உறுப்பினர் அட்டை போன்றது. இது அகிம்சை ஆயுதம் ஆகும். அதனை நீங்கள் பயன்படுத்தி அரசு பொறுப்பில் உள்ளவர்களிடம் உங்களின் உரிமைகளை உரிமையுடன் கேட்கலாம்.

தடைகளை வென்று...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர்வு அதிகரித்து கொண்டே செல்கிறது. நமது கட்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ–மாணவிகள் அதிகளவில் சேருகின்றனர். அடுத்த மாதம் மாணவர்களின் எழுச்சி தெரியவரும். நான் கல்லூரிக்கு செல்வதை அரசு ஆணை பிறப்பித்து தடுத்து இருக்கிறார்கள். அது எனக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

நான் பள்ளிப்பாடத்தைக்கூட சரியாக முடிக்கவில்லை. அதனால் எனக்கு கல்லூரியில் அனுமதி கிடைக்காது. இருந்தாலும் மாணவர்கள் பெருந்தன்மையாக அழைக்கிறார்கள். அதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த தடைகளை எல்லாம் வென்று சரித்திரம் படைப்போம். அதற்கான முன்மொழிவுகளை சினிமா பாடல்களில் கூறி இருக்கிறோம். அதனை நடைமுறையில் காண்பிப்போம். எங்கள் இளைஞர்களின் பலம் என்ன என்பதை தெரியப்படுத்துவோம். நாளை நமதே என்று நம்புங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்து கொள்வோம்.

இவ்வாறு கமல்ஹாசன் ஆவேசமாக பேசினார்.

--–

(பாக்ஸ்) ஏமாற்றம் அடைந்த தொண்டர்கள்

வள்ளியூர் கலையரங்கம் அருகில் கமல்ஹாசன் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு இருந்தனர். ஆனால் பணகுடியில் இருந்து காரில் புறப்பட்ட கமல்ஹாசன், வள்ளியூரில் நின்று பேசாமல் திசையன்விளைக்கு சென்று விட்டார். இதனால் அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமாயணம் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்டதாக கமல்ஹாசனின் மீது வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், அவர் வள்ளியூரில் பேசாமல் சென்று இருக்கலாம் என்று பொதுமக்கள் சிலர் கூறினர். தாமதமாக சுற்றுப்பயணம் தொடங்கியதாலும், பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்ததாலும் வள்ளியூரில் கமல்ஹாசன் பேசாமல் சென்று விட்டதாக தொண்டர்கள் கூறினர்.


Next Story