வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 65 பேர் தொழில் தொடங்க ரூ.40 லட்சம் மானியம் வழங்க இலக்கு


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 65 பேர் தொழில் தொடங்க ரூ.40 லட்சம் மானியம் வழங்க இலக்கு
x
தினத்தந்தி 17 May 2018 10:30 PM GMT (Updated: 17 May 2018 8:45 PM GMT)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 65 பேர் தொழில் தொடங்க ரூ.40 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், யூ.ஓய்.இ.ஜி.பி. என்ற திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவைத் தொழில்களை அதிகபட்சம் ரூ.3 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில் களை அதிகபட்சம் ரூ.1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். இதற்காக விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு மாநில அரசால் 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும்.

தொழில் தொடங்கும் பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பில் 10 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும். சிறப்பு பிரிவினரான பட்டியலிடப்பட்ட இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 5 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும். மீதம் உள்ள முதலீட்டு தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானத்திற்கு ஆதாரமாக சான்றுறுதி அலுவலர் முன்னிலையில் மனுதாரர் அளித்த ஆணை உறுதி ஆவணம் சமர்ப்பித்தாலே போதுமானது. இந்த கடன்கள் பெறுவதற்கு சொத்துப் பிணையம் தேவையில்லை.

விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் வயது வரம்பு 35 ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இக்கடன் திட்டத்திற்காக விண்ணப்பிப்போர் www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/uye-gp என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தாமே தயாரித்த திட்ட அறிக்கை, கல்விச்சான்று, குடும்ப அடையாள அட்டை, இனம், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் ஆகியவற்றிற்கான சான்று நகல்களுடன் இரட்டை நகல்களில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எல்க்ஹில் சாலை, ஊட்டி என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இத்திட்டத்தின் கீழ் உல்லன் ஆடை, அடுமனை பொருட் கள், சாக்லெட், சணல் பைகள், அழகு நிலையம், பாக்குமட்டை தட்டுகள் தயாரித்தல், மளிகை கடை, புகைப்பட நிலையம், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஜெராக்ஸ் சென்டர், லேத் ஒர்க்ஸ், சமையல் பாத்திரங்கள் வாடகை, இருசக்கர வாகனங்கள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட தொழில் களை தொடங்க சாத்தியக் கூறுகள் உள்ளன.

இதற்காக 2018-2019-ம் நிதியாண்டில் நீலகிரி மாவட்டத்தில் 65 நபர்களுக்கு ரூ.40 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி, புதிய தொழில்கள் தொடங்கி வேலைவாய்ப்பை பெருக்கி பொருளாதார ஏற்றம் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story