மோட்டார்சைக்கிளில் சென்ற பிரபல ரவுடி வெட்டிக் கொலை


மோட்டார்சைக்கிளில் சென்ற பிரபல ரவுடி வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 9:46 PM GMT)

ஓசூர் அருகே நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் சென்ற பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்ன தாசப்பா. இவரது மகன் வெங்கட்ராஜ் (வயது 30). பிரபல ரவுடி. நேற்று இரவு 8 மணி அளவில் இவர் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காமன்தொட்டி அருகில் பாத்தகோட்டா பிரிவு சாலை பக்கமாக தனது நண்பர்கள் மாதேஸ், நாகேஷ் ஆகிய 2 பேருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அந்த நேரம் இவரை பின்தொடர்ந்து காரில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதினார்கள். இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வெங்கட்ராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து திபுதிபுவென்று இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல், தாங்கள் கையில் வைத்திருந்த வீச்சரிவாளால் வெங்கட்ராஜை வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வெங்கட்ராஜ் முயன்றார்.

ஆனாலும் அந்த கும்பல் விடாமல் விரட்டி சென்று வெங்கட்ராஜை நடுரோட்டில் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் வெங்கட்ராஜூக்கு தலை, கை உள்பட உடலில் பல இடங்களில் வெட்டு காயம் விழுந்தது. இதில் தலை சிதைந்து வெங்கட்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த வெங்கட்ராஜின் நண்பர்கள் 2 பேரும் தப்பி ஓட முயன்றனர். அதில் மாதேஸ், நாகேஷ் ஆகியோரை கொலையாளிகள் சரமாரியாக சுற்றி வளைத்து வெட்டினார்கள். இதில் நாகேஷ் வெட்டு காயங்களுடன் தப்பி ஓடி விட்டார். மாதேசின் கதி என்ன? என்று தெரியவில்லை.

இந்த நிலையில் இந்த கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் சிலர் அந்த கும்பலை விரட்டி பிடிக்க முயன்றனர். அந்த நேரம் கொலையாளிகள் தாங்கள் வந்த காரை நடுரோட்டில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜ், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் கொலையுண்ட வெங்கட்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கட்ராஜூடன் வெட்டு காயம் அடைந்த நண்பர் மாதேஸ் உயிருடன் இருக்கிறாரா? அல்லது அவரும் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையுண்ட வெங்கட்ராஜ் பிரபல ரவுடி ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கட்ராஜின் தம்பி வெங்கட்ராமனையும், அவரது நண்பரையும் வெங்கட்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் சேர்ந்து கடத்தி சென்றனர். இதில் 2 பேரும் கொலை செய்யப்பட்டு வெவ்வேறு இடங்களில் அவரது உடல்கள் வீசப்பட்டன. இந்த இரட்டை கொலையில் வெங்கட்ராஜ் மற்றும் சிலர் மீது ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வெங்கட்ராஜூக்கும், அவரது நண்பர் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை வந்தது. இதில் அவரது நண்பரை வெங்கட்ராஜ் வெட்டிக் கொலை செய்தார். இவ்வாறு 3 கொலை வழக்கில் தொடர்புடைய வெங்கட்ராஜை பழிக்குபழியாக வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகள் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்றவரை காரில் வந்த கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story