ஆய்வின் போது குறைபாடு கண்டுபிடிப்பு: 17 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து


ஆய்வின் போது குறைபாடு கண்டுபிடிப்பு: 17 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து
x
தினத்தந்தி 17 May 2018 10:45 PM GMT (Updated: 17 May 2018 9:47 PM GMT)

பள்ளி வாகனங்களின் ஆய்வின் போது குறைபாடு கண்டறியப்பட்டதில் 17 வாகனங்களின் தகுதி சான்றை ரத்து செய்து கலெக்டர் ராஜாமணி நடவடிக்கை எடுத்தார்.

திருச்சி,

திருச்சி தீரன் நகரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மேற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துக்குட்பட்ட பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:-

பாதுகாப்பில்லாத வகையில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களை தகுதி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மேற்கு மற்றும் மணப்பாறை போக்குவரத்துதுறை அலுவலகத்திற்கு உட்பட்ட 152 வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. இதில் 17 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

கண் பரிசோதனை

ஆய்வின் போது பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு 152 ஓட்டுனர்களில் 16 ஓட்டுனர் களுக்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தந்த பள்ளி தாளாளர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைப்பது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உதவி கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், போக்குவரத்து துணை ஆணையர் உமாசக்தி, போலீஸ் உதவி கமிஷனர் அருணாச்சலம், தீயணைப்பு மீட்பு பணிகள்துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கலெக்டர் எச்சரிக்கை

ஆய்வின் போது போக்குவரத்து அதிகாரிகளை கடுமையாக கலெக்டர் ராஜாமணி எச்சரித்தார். பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து வாகனங்களும் தயார் செய்து நல்ல முறையில் நிர்வாகம் வைத்திருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஆய்வுக்காக மட்டும் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்துவது சரியல்ல. அதிகாரிகளும் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார். 

Next Story