இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டல் தனியார் நிறுவன கண்காணிப்பாளர் கைது


இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டல் தனியார் நிறுவன கண்காணிப்பாளர் கைது
x
தினத்தந்தி 17 May 2018 10:15 PM GMT (Updated: 17 May 2018 9:48 PM GMT)

இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய வேலூரை சேர்ந்த தனியார் நிறுவன கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்,

வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள வீரரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 28). இவர் சேலம் மாவட்டம் மோட்டூர் அருகே உள்ள கிராமத்தில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் வசித்த ஒரு 28 வயது வாலிபருக்கும், பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன்பேரில் பாண்டியன், வாலிபரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு நாள் வாலிபரின் வீட்டிற்கு பாண்டியன் சென்றுள்ளார். அங்கு வாலிபர் இல்லை. அவரின் 24 வயது மனைவி குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அதனை எட்டிப்பார்த்த பாண்டியன் யாருக்கும் தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளார்.

பின்னர் அதனை, அவரிடம் காட்டி தனது ஆசைக்கு இணங்கும்படியும், தான் கேட்கும் பணம் தரும்படியும் வற்புறுத்தி உள்ளார். மறுத்தால் படத்தை ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.

அதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அவரது கணவர் மற்றும் தனது தந்தையிடம் கூறினார். இதனை அறிந்த பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது சொந்த ஊரான வீரரெட்டி பாளையம் கிராமத்துக்கு வந்து விட்டார்.

தனது ஆசைக்கு இணங்காமல் செல்போனில் குளிப்பதை படம் பிடித்த தகவலை குடும்பத்தில் உள்ளவர்களிடம் இளம்பெண் தெரிவித்து விட்டாளே என்று பாண்டியன் கடும் ஆத்திரம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ’தனது வீட்டிற்கு நேரில் வந்து என்னை சந்திக்க வேண்டும். அப்போது தான் செல்போனில் உள்ள படத்தை அழிப்பேன். இல்லையென்றால் அனைத்து ‘வாட்ஸ்-அப்’பிலும் படத்தை அனுப்பி விடுவேன்’ என்று கூறி உள்ளார்.

இதையடுத்து இளம்பெண் கடந்த 15-ந் தேதி தனது தந்தையை அழைத்து கொண்டு வீரரெட்டிபாளையம் வந்துள்ளார். அப்போது பாண்டியன் படத்தை அழிக்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக பாண்டியனுக்கும், இளம்பெண்ணின் தந்தைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாண்டியன், இளம்பெண்ணின் தந்தையை சரமாரியாக தாக்கி உள்ளார். அதனை தடுத்த இளம்பெண்ணையும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த இளம்பெண் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து இளம்பெண் அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனில் இருந்த இளம்பெண் குளித்த படம் அழிக்கப்பட்டது. 

Next Story