‘ஆஸ்பெட்டாஸ்’ மேற்கூரை பறந்ததில் தொட்டிலோடு தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை பரிதாப சாவு


‘ஆஸ்பெட்டாஸ்’ மேற்கூரை பறந்ததில் தொட்டிலோடு தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை பரிதாப சாவு
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 9:48 PM GMT)

காரிமங்கலம் அருகே சூறைக்காற்றில் வீட்டின் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை பறந்தது. இதில் தொட்டிலோடு தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ளது பெரிய பூலாப்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 32). பால் வியாபாரி. இவருடைய மனைவி சாலியம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஆதித்்யன்(3) என்ற மகன் உள்ளான். வைஷ்ணவி(1) என்ற பெண் குழந்தையும் இருந்தது. இவர்கள் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையால் ஆன வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குமார் தனது வீட்டின் அருகே பால் கொள்முதல் செய்து கொண்டிருந்தார். சாலியம்மாள், வீட்டின் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையில் இருந்த கம்பியில் தொட்டில் கட்டி குழந்தை வைஷ்ணவியை தூங்க வைத்தார். பின்னர் அவர் வீட்டிற்கு வெளியே சென்று வேலை செய்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று சூறைக்காற்று வீசத்தொடங்கியது. பின்னர் சிறிதுநேரம் கழித்து கனமழை பெய்தது. மேலும் மழை அதிகமாக, அதிகமாக காற்றின் வேகமும் அதிகரித்தது. அந்த நேரம் எதிர்பாராதவிதமாக சூறைக்காற்றில் குமார் வீட்டின் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை பறந்து அருகே உள்ள சாலையில் விழுந்தது. இதில் குழந்தை வைஷ்ணவியும் தொட்டிலோடு சேர்த்து தூக்கி வீசப்பட்டாள். மேற்கூரையோடு சாலையில் விழுந்த குழந்தை வைஷ்ணவி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதைப் பார்த்து குமார் மற்றும் சாலியம்மாள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் ஓடிச்சென்று குழந்தையின் உடலை மடியில் தூக்கி வைத்து கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது குழந்தை இறந்ததை பார்த்து அவர்களும் கண்கலங்கினர். இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் தாசில்தார் ரேவதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

Next Story