சட்டசபையில் சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம் எடியூரப்பா பேட்டி


சட்டசபையில் சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம்  எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 17 May 2018 10:57 PM GMT (Updated: 17 May 2018 10:57 PM GMT)

சட்டசபையில் சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார். அவர் நேற்று மாலை பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு வந்தார். அவரை மத்திய மந்திரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அதன் பிறகு எடியூரப்பா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். அதனால் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்.

அத்தனை நாட்கள் நாம் காத்திருக்க தேவை இல்லை. சட்டசபையில் அடுத்த சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம். இதில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் பா.ஜனதாவை ஆதரித்து உள்ளனர். ஆனால் அதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் நடந்து கொள்கின்றன. புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அந்த கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். ஆயினும் அந்த கட்சி திருந்துவதாக தெரியவில்லை.

தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன், நெசவாளர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளேன். அதற்கு உடனே கையெழுத்து போட முடியாத நிலை உள்ளது. அடுத்த 2 நாட்களில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இன்று(அதாவது நேற்று) விதான சவுதா மற்றும் கவர்னர் மாளிகை முன்பு மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி இருந்தனர். மக்களின் அன்புக்கு விலை கிடையாது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்கிவிட்டோம். அடுத்து காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம். யார் என்ன முயற்சி செய்தாலும், நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். 5 ஆண்டுகள் ஆட்சி நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்துவோம். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தங்களின் எம்.எல்.ஏ.க்களை ஓட்டலில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களுக்கு செல்போன் உள்ளிட்டவற்றை கொடுக்காமல், தொல்லை கொடுப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது.

அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைத்து மோடிக்கு பரிசாக கொடுப்போம். நமது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

முன்னதாக முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

“சட்டசபையில் வாக்கெடுப்பின் போது பா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும். இது 100 சதவீதம் உறுதி. பா.ஜனதா அரசு 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்யும். காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி புனிதமில்லாத கூட்டணி. அவர்கள் ஆட்சியை கைப்பற்ற கூட்டணி அமைத்து முயற்சித்தனர். ஆனால் மக்கள், தேர்தலில் அந்த கூட்டணியை நிராகரித்துவிட்டனர்.

தேர்தலில் கர்நாடக மக்கள் எனக்கும், எனது கட்சிக்கும் ஆதரவு கொடுத்துள்ளனர். சட்டசபையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்களது மனசாட்சி படியும், மக்களின் நிலையை பிரதிபலிக்கும் வகையிலும் வாக்களிக்க வேண்டும்.“

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story