கோழிப்பண்ணைகளில் சிறந்த உயிர் பாதுகாப்பு - ஆராய்ச்சி நிலையம் தகவல்


கோழிப்பண்ணைகளில் சிறந்த உயிர் பாதுகாப்பு - ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 18 May 2018 11:15 PM GMT (Updated: 18 May 2018 7:28 PM GMT)

கோழிப்பண்ணைகளில் சிறந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்,

கோழிகள் பெரும்பாலும் மேல்மூச்சு குழாய் அயற்சி நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளதால், பண்ணையாளர்கள், பண்ணைகளில் சிறந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 1 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 2 மி.மீட்டரும், 22-ந் தேதி 3 மி.மீட்டர் மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று முதல் 2 நாட்களில் 6 கி.மீ. வேகத்திலும், அடுத்த 2 நாட்களில் 4 கி.மீ. வேகத்திலும் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக முறையே 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 80, 80, 80, 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50, 50, 50, 50 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை இருக்கும். இதன் காரணமாக பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. எனவே கோழிகளில் தீவன எடுப்பு இயல்பை அடைந்து முட்டை உற்பத்தியும் சீராகும். தென்மேற்கு பருவ மழை, காலத்தே தொடங்கும் அறிகுறியாக காற்றின் திசை தென்மேற்கில் இருந்து வீச தொடங்கி உள்ளது. காற்றின் வேகமும் சற்றே கூடுதலாகவும் உள்ளதால், பகல் வெப்பம் உயர்ந்தாலும் மாலையில் அதன் தாக்கம் குறைய தொடங்கும்.

கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல்மூச்சு குழாய் அயற்சி நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளது தெரியவந்து உள்ளது. எனவே பண்ணைகளில் சிறந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story