வரத்துக் கால்வாய்களில் கற்கள் மாயம், விவசாயிகள் புகார்


வரத்துக் கால்வாய்களில் கற்கள் மாயம், விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 18 May 2018 11:09 PM GMT (Updated: 18 May 2018 11:09 PM GMT)

மானாமதுரை பகுதியில் வரத்துக் கால்வாய்களில் கற்கள் மாயமாகி உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மானாமதுரை,

மதுரை வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை வைகை ஆறு செல்கிறது. வைகை ஆற்றில் இருந்து வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் பிரியும் இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் இரும்பு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு தண்ணீரின் தேவைக்கு ஏற்ப வெளியேற்றவும், அதை நிறுத்தி வைக்கவும் வழிவகை செய்யப்பட்டுஉள்ளது.

கால்வாய்களில் தண்ணீர் அதிக அழுத்தத்துடன் வெளியேறும் போது வாய்க்கால்களில் சரிவு ஏற்பட்டு தண்ணீர் தடைபட வாய்ப்புஉள்ளது. இதனை தவிர்க்க ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் கால்வாயின் இருபுறமும் தரைப்பகுதியில் முண்டுக்கற்கள் பதிக்கப்படும். இவ்வாறு பொதுப்பணித்துறை சார்பில் மானாமதுரை பகுதியில் உள்ள கட்டிகுளம், கீழப்பசலை, குவளைவேலி, மிள கனூர் உள்ளிட்ட கால்வாய்களில் முண்டுக்கற்கள் பதிக்கப்பட்டுஉள்ளன.

தற்போது இந்த பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிக்காக பல இடங்களில் ஷட்டர்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர ஷட்டர்கள் உயரமாகவும், கால்வாய் பள்ளமாகவும் இருப்பதால் தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லாத பகுதிகளில் ஷட்டர்கள் மாற்றிய அமைக்கப்பட்டுஉள்ளது.

இதனால் பழைய ஷட்டர்கள் அகற்றப்பட்டு புதிய ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மானாமதுரை அண்ணாசிலை அருகே உள்ள கீழப்பசலை கால்வாய் உள்ளிட்ட ஒரு சில கால்வாய்களில் பணிகள் முடிந்துள்ளன. ஆனால் ஏற்கனவே கால்வாய்களில் பதிக்கப்பட்டிருந்த முண்டுக் கற்கள் அகற்றப்பட்டு சிமெண்டு சுவர் அமைக்கப்பட்டுஉள்ளது. பழைய முண்டுக் கற்களை பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு கொண்டு வராமல் ஒரு சில அதிகாரிகள் விற்பனை செய்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

முண்டுக்கற்களை கால்வாய் நெடுகிலும் பதித்து இருந்தால் தண்ணீர் சேதாரமின்றி கண்மாய்களுக்கு சென்றிருக்கும். ஆனால் அதிகாரிகள் சிலர் உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் முண்டுக்கற்களை விற்பனை செய்துள்ளதால் பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுப்பணிதுறைக்கு இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story