திருப்பத்தூரில் மழையால் மின்வினியோகம் பாதிப்பு, பொதுமக்கள் அவதி


திருப்பத்தூரில் மழையால் மின்வினியோகம் பாதிப்பு, பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 18 May 2018 11:13 PM GMT (Updated: 18 May 2018 11:13 PM GMT)

திருப்பத்தூரில் மழையால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதில் மின்கம்பிகள் சேதமடைந்து திருப்பத்தூர் பகுதியில் சீரான மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் அருகே காரையூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மின்வினியோகம் தடைபட்டதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பல்வேறு வீடுகளில் அதிகம் மற்றும் மிக குறைந்த அழுத்த மின்சாரத்தால் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன.

இது குறித்து காரையூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கூறியதாவது:- மழைக்காலம் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது தொடர்ந்து இதுபோன்ற சிரமத்தை இப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் மின்வினியோகம் தடைபட்டதால் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இந்த பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த பகுதியில் உள்ள மின்இணைப்பை சரி செய்து தொடர்ந்து சீரான மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் காரைக்குடி பகுதியில் நேற்று காலை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 2.30 மணிஅளவில் பலத்த இடியுடன் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் காரைக்குடி பகுதியில் நடைபெற்று வந்த பாதாள சாக்கடை திட்ட பணி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்த பணிக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் நிரம்பியது. மேலும் காரைக்குடி கல்லூரி சாலை, செக்காலை ரோடு, நூறடி சாலை, 2-வது பீட் பகுதி ஆகிய பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் இருந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story