இரவு நேர சாலை விபத்துகளை தவிர்க்க டிரைவர்களுக்கு தேநீர், போலீசார் ஏற்பாடு


இரவு நேர சாலை விபத்துகளை தவிர்க்க டிரைவர்களுக்கு தேநீர், போலீசார் ஏற்பாடு
x
தினத்தந்தி 18 May 2018 11:19 PM GMT (Updated: 18 May 2018 11:19 PM GMT)

இரவு நேரங்களில் நடைபெறும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் டிரைவர்களுக்கு தூக்கத்தில் இருந்து மீட்கும் வகையில் போலீசார் சார்பில் தேநீர் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம்,

திருப்பாலைக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 15-ந் தேதி அன்று கன்னியாகுமரியில் இருந்து சென்ற சுற்றுலா வேன் அந்த வழியாக சென்ற லாரி மீது மோதி விபத்துக்குஉள்ளானது. இந்த கோர விபத்தில் 4 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்தனர். மேலும் சத்திரக்குடி அருகே நடந்த விபத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.

இந்த 2 விபத்துகளிலும் வாகனங்களை ஓட்டிவந்த டிரைவர்கள் தூங்கியதே காரணம் என்று தெரியவந்துஉள்ளது. பொதுவாக சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் ஓய்வின்றி தொடர்ந்து வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதன்காரணமாகவே விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது.

குறிப்பாக அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்திலேயே இதுபோன்ற விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. எனவே இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா இனிமையான பாதுகாப்புமிக்க பயணம் என்ற பெயரில் வாகன ஓட்டுனர்களை வரவேற்று தேநீர் மற்றும் குடிநீர் வழங்கி புத்துணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார்.

இதன்படி கிழக்கு கடற்கரை சாலையில், சாயல்குடி மற்றும் தொண்டி அருகிலும், மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் அருகிலும் தலா ஒரு இன்ஸ்பெக்டர், 2 போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருடன் இணைந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை நிறுத்தி வரவேற்று, வாகன ஓட்டுனர்களுக்கு தேநீர் மற்றும் குடிநீர் வழங்கி புத்துணர்வு அளித்தும், சாலை பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்கி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தியும் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி போலீசார் மேற்கண்ட இடங்களில் மாவட்ட எல்லையில் நுழையும் வாகன டிரைவர்களுக்கு தேநீர் மற்றும் குடிநீர் வழங்கி புத்துணர்வு பெறச்செய்து வழி அனுப்பி வருகின்றனர். போலீசாரின் இந்த சமுதாய பாதுகாப்பு பணியினை ராமநாத புரம் மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகன ஓட்டுனர்களும் பாராட்டி செல்கின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் வாகனங்களை சாலையில் இயக்குவதற்கு வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன், விபத்துகளும் அதிக அளவில் நடைபெறுவது கண்டறியப்பட்டுஉள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு சாலையின் இருபுறங்களிலும் உள்ள எச்சரிக்கை பலகைகள், மரங்கள், பாலங்கள் மற்றும் மைல் கற்கள் ஆகியவற்றை எளிதில் அடையாளம் காணும் பொருட்டு ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. வளைவான மற்றும் ஆபத்தான சாலைகள் உள்ள இடங்களில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் பொருட்டு சாலையின் குறுக்கே பேரிக்கார்டுகள் வைத்து ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Next Story