ஐகோர்ட்டில் வழக்கு இருக்கும்போது மருத்துவ பட்டமேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்த அவசரம் ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி


ஐகோர்ட்டில் வழக்கு இருக்கும்போது மருத்துவ பட்டமேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்த அவசரம் ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி
x
தினத்தந்தி 18 May 2018 11:30 PM GMT (Updated: 18 May 2018 11:30 PM GMT)

ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்த அவசரம் ஏன்? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் உள்ள 3 தனியார் மருத்துவக்கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் புதுவை மாநில மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை புதுவை அரசும் சுகாதாரத்துறை செயலாளர் கந்தவேலுவும் செய்துள்ளனர். 2-ம் கட்ட கலந்தாய்வு முடிந்தபின்னர் அதில் நிரப்பப்படாத இடங்களை (மணக்குள விநாயகர் கல்லூரி தவிர்த்து) புதுவை மாநில மாணவர்களை கொண்டு நிரப்பவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

ஆனால் அரியூர் வெங்கடேஸ்வரா, பிம்ஸ் ஆகிய 2 கல்லூரிகளும் கோர்ட்டை அணுகி அரசின் உத்தரவுக்கு தடை கேட்டன. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் அகில இந்திய அளவிலான தரவரிசை அடிப்படையில் மாப்-ஆப் கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்ப உத்தரவிட்டார். இதுதொடர்பாக நாங்கள் கவர்னரை சந்தித்து புகார் அளித்ததன் அடிப்படையில் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது. ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் கவர்னரிடம் பொய்யான தகவல்களை கூறி 60-க்கும் மேற்பட்ட இடங் களை அகில இந்திய தரவரிசை பட்டியலின்படி நிரப்ப ஏற்பாடு செய்தார்.

ஐகோர்ட்டில் இந்த வழக்கு 26-ந்தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் இவ்வளவு சீக்கிரம் கலந்தாய்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன? பெரிய மாநிலமான தமிழகத்தில் இடஒதுக்கீடு பிரச்சினை காரணமாக இன்னும் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அங்குள்ள சுகாதார செயலாளர் ஜூன் மாதம் கலந்தாய்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், கோர்ட்டிற்கும் கடிதம் அனுப்பி அனுமதி பெற்றுள்ளார். இதேபோல் புதுவை சுகாதாரத்துறை செயலாளர் காலநீட்டிப்பு பெறாதது ஏன்? தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்து அவர் புதுவை மாநில மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளார்.

புதுவை மாணவர்கள் ரூ.20 லட்சத்து 34 ஆயிரம் கட்டணம் செலுத்த தயாராக இருந்தும் தனியார் கல்லூரிகள் பிற மாநில மாணவர்களை சேர்க்க இவர் இடைத்தரகர் போன்று செயல்பட்டுள்ளார். கவர்னருக்கு தவறான தகவல்களை கூறி ஏமாற்றி உள்ளார். அரசு செயலாளர்களின் செயல்பாடு குறித்து மதிப்பிட்டபோது சுகாதாரத்துறை செயலாளருக்கு கவர்னர் பூஜ்யம் மதிப்பெண்தான் வழங்கினார்.

புதுவை மக்களுக்கான திட்டங்களை மாநில அதிகாரியான கந்தவேலுதான் தடை செய்கிறார் என்று முதல்-அமைச்சரும், அமைச்சர் கந்தசாமியும் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவசரம் அவசரமாக கலந்தாய்வு நடத்த காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார். 

Next Story