சாவிலும் இணைபிரியாத சகோதரர்கள்: அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் சாவு


சாவிலும் இணைபிரியாத சகோதரர்கள்: அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் சாவு
x
தினத்தந்தி 19 May 2018 10:15 PM GMT (Updated: 19 May 2018 9:32 PM GMT)

கீழ்வேளூர் அருகே அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் பரிதாபமாக இறந்தார். சாவிலும் இணைபிரியாத சகோதரர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த நீலப்பாடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சம்பத்(வயது 51). இவர் திருவாரூர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில நாட்களாக சம்பத் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இவரது அண்ணன் இளவரசன்(52). இவர், கீழ்வேளூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று சம்பத்துக்கு உடல்நிலை மோசமானதால் அவரது உறவினர்கள், டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த இளவரசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அடுத்தடுத்து சாவு

இதையடுத்து இளவரசன், தம்பி சம்பத் வீட்டிற்கு சென்று அவரை பார்த் துள்ளார். அப்போது தம்பியின் உடல்நிலை மோசமாக இருக்கிறதே என்று வேதனையில் வீட்டிற்கு வந்தவர் நேற்று முன்தினம் இரவு ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சம்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அண்ணன் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த சம்பத்தும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அண்ணன், தம்பி இருவரும் சாவிலும் இணை பிரியாமல் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டது. 

Next Story