கதிராமங்கலம் போராட்டத்தின் ஒரு ஆண்டு நிறைவு: ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும்


கதிராமங்கலம் போராட்டத்தின் ஒரு ஆண்டு நிறைவு: ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும்
x
தினத்தந்தி 19 May 2018 11:00 PM GMT (Updated: 19 May 2018 9:32 PM GMT)

கதிராமங்கலம் போராட்டத்தின் ஒரு ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தில் இருந்து வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்று பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு மே 19-ந் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி அப்பகுதியில் மக்கள் போராட்டத்தை தொடங்கி ஓரு ஆண்டு நிறைவு பெற்றது. நேற்று கதிராமங்கலம் அய்யனார் கோவில் திடலில் அப்பகுதி மக்கள் திரண்டனர்.

கதிராமங்கலம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் முருகன், பா.ம.க. சார்பில் வக்கீல் பாலு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் ரங்கசாமி, துரை.கோவிந்தராஜன், தி.மு.க. சார்பில் கோவி.செழியன் எம்.எல்.ஏ., த.மா.கா. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வக்கீல்் பார்வேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது சென்னை கலைக்குழுவின் விழிப்புணர்வு பறை நாட்டியம் மற்றும் கதிராமங்கலம் பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆகியவையும் நடந்தது. போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். போராட்ட களத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்து மதிய உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பணிகளுக்கு எதிராகவும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேறும் வரை தொடர்ந்து மக்களின் அறப்போராட்டம் தொடரும். அதுவரை மக்கள் போராட வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க மத்திய-மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கதிராமங்கலம் போராட்டத்தின் ஒரு ஆண்டு நிறைவையொட்டி கதிராமங்கலத்தில் தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கதிராமங்கலத்திலிருந்து புறப்பட்ட நேரத்தில் பா.ஜனதா கட்சியின் சைக்கிள் பேரணி சிவராமபுரம் சாலையிலிருந்து கதிராமங்கலத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க சீமான் உள்ளிட்ட கட்சியினரின் வாகனங்களை மாற்றுப்பாதையான பூம்புகார் சாலையில் கும்பகோணம் நோக்கி போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story