கோவிலில் திருவிழா நிகழ்ச்சிகளை வழக்கமான நேரத்தில் நடத்த அனுமதிக்க கோரி பொதுமக்கள் தர்ணா


கோவிலில் திருவிழா நிகழ்ச்சிகளை வழக்கமான நேரத்தில் நடத்த அனுமதிக்க கோரி பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 20 May 2018 10:45 PM GMT (Updated: 20 May 2018 9:48 PM GMT)

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நிகழ்ச்சிகளை வழக்கமான நேரத்தில் நடத்த அனுமதிக்கோரி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி, 10 நாட்கள் தொடர்ந்து நடை பெறும். அதேபோல இந்தாண்டுக்கான திருவிழாவை நேற்று காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்க முன்னேற்பாடு பணிகள் நடந்து வந்தன.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் ஒரு குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென கோவில் முன்பு திரண்டனர். அங்கு அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீதிமன்ற உத்தரவுபடி வழக்கமான நேரத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்ககோரி தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், பொதுமக்களிடம் சமாதானம் பேசி கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். ஆனால் உரிய அனுமதி கிடைக்கும் வரை கோவிலுக்குள் வரமாட்டோம் என்று அவர்கள் மீண்டும் வெளியே வந்து வெயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஒரு குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள தகவல் அறிந்ததும், கோவில் நிர்வாகி செங்கோடன் உள்பட நிர்வாகிகள், வட்டாட்சியர் (பொறுப்பு) யோகேஸ்வரன், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) அருள்வேந்தன், கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு வந்தனர். அங்கு பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்த கரை பகுதி பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் நீதிமன்ற உத்தரவுப்படி உங்களுக்கு வழக்கமான மாலை 6 மணி முதல் இரவு 12 மணிக்குள் திருவிழா நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தர்ணாவில் ஈடுபட்டிருந்த மக்கள் மாலை 5 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிகளுக்கான பணிகள் நடந்தன.

இந்தநிலையில் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாத கரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கும் கொத்தமங்கலத்தை சேர்ந்த ஒரு குடியிருப்பு மக்களுக்கும் ஒரே நாளில் நிகழ்ச்சிகள் நடந்தால் பிரச்சினைகள் ஏற்படும். எனவே தனித்தனியாக திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கூறி கொத்தமங்கலம் கடைவீதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 65 பேரை கீரமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.


Next Story