விடுமுறை தினத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்


விடுமுறை தினத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 20 May 2018 10:45 PM GMT (Updated: 20 May 2018 9:56 PM GMT)

விடுமுறை தினத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

பழனி,

விடுமுறை தினத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி விளங்குகிறது. ஆண்டு முழுவதும் இங்கு திருவிழா நடைபெறுவதால் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை எப்போதும் இருக்கும். அதிலும் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட 2 மடங்கு பக்தர்கள் மலைக்கோவிலில் குவிவார்கள். அந்த வகையில் நேற்று விடுமுறை தினம் மற்றும் அக்னி நட்சத்திர கழு திருவிழா இன்று (திங்கட்கிழமை) நிறைவடைவதையொட்டி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது. அதே போல் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, சிறப்பு மற்றும் கட்டண தரிசன வழிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.

வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்ததால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் தடுக்க மலைக்கோவில் வெளிப்பிரகாரம் மற்றும் படிப்பாதை, யானை பாதைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதே போல் சாமி தரிசனம் செய்தவர்களை ரோப்கார், மின் இழுவை ரெயிலுக்காக காத்திருக்காமல் படிப்பாதையில் செல்லும்படி கேட்டுக்கொண்டனர். இதன் மூலம் கூட்ட நெரிசல் ஏற்படுவது ஓரளவு தடுக்கப்பட்டது.

Next Story