சேலத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


சேலத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 20 May 2018 11:18 PM GMT (Updated: 20 May 2018 11:18 PM GMT)

சேலத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலியை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

சேலம்,

சேலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

சேலம் குகை நரசிங்க புரத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி ஜானகி (வயது 48). இவர் சேலத்தில் திருச்சி மெயின் ரோட்டில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். நேற்று முன்தினம் மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த ஆசாமி திடீரென்று ஜானகி கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானகி, திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் இருவரும் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பந்தமாக பழைய திருடர்கள் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story