மண்டபத்தில் ஆட்டோவில் ஏற்றி வந்த 70 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபத்தில் ஆட்டோவில் ஏற்றி வந்த 70 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த கடலோர போலீசார், இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனைக்குளம்
மண்டபம் முனைக்காடு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் பிடித்து வருவதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து மண்டபம் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் கடலோர போலீசார் செய்யது அப்பாஸ், ஆனந்த்பாபு, கருணாநிதி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது முனைக்காடு கடற்கரையில் இருந்து வேதாளை நோக்கி வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பிளாஸ்டிக் டப்பாக்களில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் சுமார் 70 கிலோ இருப்பது தெரியவந்தது. அந்த கடல் அட்டைகள் அனைத்தும் உயிரோடு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து வந்ததாக வேதாளையை சேர்ந்த அப்பாஸ் (வயது33), பெரியபட்டினத்தை சேர்ந்த நகுபர் (30) ஆகிய 2 பேரையும் கடலோர போலீசார் கைது செய்ததுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்து கடலோர காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்பு பறிமுதல் செய்த கடல் அட்டைகள் மற்றும் ஆட்டோவையும் கைது செய்த 2 பேரையும் கடலோர போலீசார் மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோவில் ஏற்றி வரப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்ட பின்பு படகு மூலமாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story