உயர் படிப்புதான் அதிக சம்பளம் பெற்று தரும்: பெற்றோர்கள் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்


உயர் படிப்புதான் அதிக சம்பளம் பெற்று தரும்: பெற்றோர்கள் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 May 2018 10:30 PM GMT (Updated: 23 May 2018 8:12 PM GMT)

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்குதான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் மூலம் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வான மாணவ-மாணவிகள் கூறினார்கள்.


கோவை

கோவை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கான சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு படிக்க வைக்கப்படுகின்றனர். இதில் தற்போது நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 21 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 20 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், 3 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.

எனது குடும்ப சூழ்நிலை காரணமாக நான் 3-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது படிப்பை பாதியில் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் அதிகாரிகள் என்னை மீட்டு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். முதலில் எனக்கு படிப்பு மீது ஆர்வம் இல்லாமல் இருந்தது. பின்னர் வேலைக்கு செல்லும் போது என் வயதை ஒட்டிய குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை கண்டு, அவர்களை போல் படிக்க ஆசைப்பட்டேன். இதன்காரணமாக நான் தற்போது 500-க்கு 427 மதிப்பெண்கள் எடுத்து உள்ளேன்.

எனக்கு கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. பெற்றோர்கள் மிக சொற்ப வருமானத்தை கருத்தில் கொண்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். ஆனால் அவர்கள் நன்றாக படித்து என்ஜினீயர் அல்லது பிற பட்டங்கள் பெற்று பணிக்கு சென்றால் ஒரு மாதத்தில் பல ஆயிரம் சம்பளம் பெற முடியும். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்குதான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நான் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவள். எனது பெற்றோர் வேலைக்காக திருப்பூர் வந்தனர். நான் 8-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் இல்லையென்றால் நான் படிக்க வேண்டிய வயதில் வேலைபார்த்துக் கொண்டு தான் இருந்திருப்பேன். படித்து நல்ல பதவியில் வேலையில் அமர்ந்தால் தான் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேலைக்கு அனுப்பி அவர்கள் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள். நான் பிளஸ்-1 ல் உயிரி கணிதம் எடுத்து படிக்க உள்ளேன்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்கள் படிக்க 31 சிறப்பு பள்ளிகள் உள்ளன. இதில் தற்போது 814 பேர் படித்து வருகின்றனர். மத்திய அரசு குழந்தை தொழிலாளர்கள் படிப்பதற்காக அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.400 உதவிதொகை வழங்கி வருகிறது. இவர்கள் பள்ளி படிப்பை முடித்து விட்டு தொழிற்கல்வி அல்லது உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாநில அரசு ஆண்டு உதவித்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்குகிறது என்றனர்.

Next Story