அத்திமூர் கிராமத்தில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை மனு


அத்திமூர் கிராமத்தில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 23 May 2018 11:00 PM GMT (Updated: 23 May 2018 8:50 PM GMT)

மூதாட்டி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அத்திமூர் கிராமத்தில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை மனு விடுவித்துள்ளார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சி.ஏழுமலை, மாவட்ட கலெக்டர் கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோரிடம் போளூர் அத்திமூர் சம்பவம் குறித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:- போளூர் அத்திமூர் கிராமத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாமி கும்பிட வந்த சென்னையை சேர்ந்த குடும்பத்தினர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து 60 பேரை கைது செய்தனர். மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள 10 கிராமத்தினர் காவல்துறைக்கு பயந்து வீட்டில் யாரும் இல்லை. அதனால் அங்குள்ள விவசாயி, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் அப்பாவி பொதுமக்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து வருகின்றனர்.

அத்திமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல் அறுவடை செய்யப்படவில்லை. கரும்பும் வெட்டப்படவில்லை. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே அத்திமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Next Story