முதல்-மந்திரி குமாரசாமியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு


முதல்-மந்திரி குமாரசாமியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு
x
தினத்தந்தி 31 May 2018 10:39 PM GMT (Updated: 31 May 2018 10:39 PM GMT)

முதல்-மந்திரி குமாரசாமியை அமெரிக்க தூதர் நேரில் சந்தித்து பேசினார். பெங்களூருவில் தூதரக அலுவலகம் திறக்குமாறு அவரிடம் குமாரசாமி வலியுறுத்தினார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடகத்தில் அமெரிக்காவை சேர்ந்த 370 நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்குமாறு முதல்-மந்திரியிடம் அவர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். மேலும் குமாரசாமி பேசியதாவது:-

அனைத்து நாடுகளின் தூதரக அலுவலகங்கள் பெங்களூருவில் உள்ளன. கர்நாடகத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஒரு உறுதியான உறவு உள்ளது. அமெரிக்காவில் கர்நாடகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பணியாற்றுகிறார்கள். எனவே பெங்களூருவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைக்க வேண்டும். இதன் மூலம் அமெரிக்கா செல்லும் கர்நாடகத்தினர் விசா பெற வசதியாக இருக்கும்.

கர்நாடகத்தினர் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லவும் உதவியாக இருக்கும். தூதர அலுவலகம் அமைக்க தேவையான நிலம், கட்டிடம் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க மாநில அரசு தயாராக உள்ளது. இவ்வாறு குமாரசாமி பேசினார்.

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாக அமெரிக்க தூதரிடம் தலைமை செயலாளர் ரத்னபிரபா எடுத்துக் கூறினார். நகரில் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள், ஜப்பான் நிதி உதவியுடன் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள், உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் குறித்தும் அவரிடம் தலைமை செயலாளர் கூறினார்.

Next Story