பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் குளத்தை சீரமைக்க வேண்டும்


பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் குளத்தை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Jun 2018 10:45 PM GMT (Updated: 7 Jun 2018 6:54 PM GMT)

வடக்குப்பட்டு ஊராட்சியில் பள்ளிக்கூடங்கள் அருகே பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் குளத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஒரகடகத்தை அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சியில் 4000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிவன் கோவில் தெருவில் மிக பெரிய குளம் உள்ளது.

இந்த குளத்தின் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்த பள்ளிக்கூடங்களில் குருவன்மேடு, எழிச்சூர், வடக்குப்பட்டு மதுரா புதுப்பேட்டை, ஆகிய கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக் கூடங்களில் இருந்து மாணவர்கள் வெளியில் வரும்போது குளத்தின் அருகே வந்து விளையாடுகின்றனர்.

இதே பகுதியில் அருகருகே 2 கோவில்கள் உள்ளதால் பக்தர்களும் அதிகமாக வந்து செல்லும் இடமாக இந்த பகுதி உள்ளது. குளக்கரையை சுற்றி தடுப்பு வேலி இல்லாததால் மிகவும் ஆபத்தான நிலை உள்ளது.

எனவே குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைத்தால் வரும் காலங்களில் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கலாம். இதேபோல் குளத்தில் பாசிகள் படிந்து காணப்படுகிறது. குளத்தில் உள்ள நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

பள்ளிக்கூடங்களில் இருந்து வெளியில் வந்து விளையாடும் மாணவர்களுக்கும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

எனவே குளத்தில் காணப்படும் பாசிகளை அகற்றி குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தி தடுப்பு வேலி அமைத்து தரவேண்டும் எனவும், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story