பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி


பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி
x
தினத்தந்தி 7 Jun 2018 10:15 PM GMT (Updated: 7 Jun 2018 7:11 PM GMT)

உத்திரமேரூர் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விவசாயி பலியானார்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த கன்னிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38). விவசாயி. நேற்று இவர் தனது வீட்டுக்கு வந்த உறவினரான மதுராந்தகத்தை அடுத்த அதிமனம் கிராமத்தை சேர்ந்த முரளி (35) என்பவருடன் உத்திரமேரூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

திருப்புலிவனம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையை தாண்டும் போது பின்னால் வந்த தனியார் பஸ்- மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோகன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

முரளிக்கு 2 கால்களும் முறிந்தன. உடனடியாக முரளியை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தனியார் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த மோகனுக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Next Story