சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதானவர்: திருச்சி மத்திய சிறையில் கைதி திடீர் சாவு


சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதானவர்: திருச்சி மத்திய சிறையில் கைதி திடீர் சாவு
x
தினத்தந்தி 7 Jun 2018 10:15 PM GMT (Updated: 7 Jun 2018 7:15 PM GMT)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உயிரிழந்தார்.

திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அப்படி அடைக்கப்பட்டவர்களில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காயப்பட்டியை சேர்ந்த சாத்தையா(வயது82) என்பவரும் ஒருவர் ஆவார். இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருமயம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.

வயது முதிர்வு காரணமாக சாத்தையாவுக்கு உடல் ரீதியாக நோய் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் திருச்சி மத்திய சிறையில் சாத்தையாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

சிறைச்சாலை வளாகத்தில் மயங்கி விழுந்த சாத்தையாவை, சிறைக்கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறைக்காவலர்கள் தாமோதரன், சதீஷ் ஆகியோர் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சாத்தையாக ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இறந்தவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதால் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சிறைச்சாலைக்கும் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சாத்தையா உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு முறைப்படி உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேகர் என்ற கரடி சேகர்(67) என்ற கைதி மூச்சுத்திணறல் காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, சிறைக்காவலர்கள் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்தும் கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story