தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வு கூடாது “என் மகளை போன்ற முடிவை எந்த மாணவியும் தேடிக்கொள்ள வேண்டாம்”


தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வு கூடாது “என் மகளை போன்ற முடிவை எந்த மாணவியும் தேடிக்கொள்ள வேண்டாம்”
x
தினத்தந்தி 7 Jun 2018 11:00 PM GMT (Updated: 7 Jun 2018 7:34 PM GMT)

தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வு கூடாது என்றும், என் மகளை போன்ற முடிவை எந்த மாணவியும் தேடிக்கொள்ள வேண்டாம் எனவும் சுபஸ்ரீயின் தந்தை உருக்கத்துடன் தெரிவித்தார்.

திருச்சி,

‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த மாணவி சுபஸ்ரீயின் தந்தை கண்ணன், அரசு பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் கூறியதாவது:-

சிறுவயது முதலே சுபஸ்ரீ டாக்டராகி சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்து வந்தாள். அதை அடிக்கடி எங்களிடமும் கூறுவாள். அதற்கேற்ப நாங்களும் அவளை ஊக்கப்படுத்தி வந்தோம். பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என்றாலும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து அயராது ‘நீட்’ தேர்வுக்காக படித்து வந்தார். ‘நீட்’ தேர்வில் சற்று பதற்றத்துடன் எழுதியாக எங்களிடம் கூறினாள்.

‘நீட்‘ தேர்வில் தவறான பதிலுக்கு மைனஸ் மதிப்பெண் கிடைக்கும் என்பதை மறந்து விட்டாள். அது தெரியாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறாள். இதில் தவறாக அளித்த பதில்கள் மூலம் வெகுவாக மதிப்பெண்கள் குறைந்து விட்டது. இதனால், ‘நீட்’தேர்வில் தேர்ச்சி பெறும் வாய்ப்பை இழந்தார்.

நானும் எனது மனைவியும் சுபஸ்ரீயிடம் ‘நீட்’ தேர்வில் ஒருவேளை தேர்ச்சி பெற முடியவில்லை என்றால்கூட உன்னை வெளிநாட்டிற்கு அனுப்பி மருத்துவ படிப்பு படிக்க வைக்கிறேன் என கூறினோம். இல்லை என்றால் மருத்துவ துறையில் பல பிரிவுகள் இருக்கிறது. அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து படி என்று கூறியிருந்தோம்.

இருப்பினும் சுபஸ்ரீ கடந்த 3 நாட்களாக எங்களிடம் எப்போதும் போல் இயல்பாக பேசாமல் இருந்து வந்தாள். இந்நிலையில் நேற்று முன்தினம் அஷ்டமியையொட்டி ஓயாமாரி சாலையில் உள்ள காலபைரவர் கோவிலில் நடைபெற்ற விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தோம். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்ததும் அன்று இரவு படுக்கை அறைக்கு சென்ற எனது மகள் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்து விட்டாள். ஆசையாக வளர்த்த செல்ல மகளை இழந்து தவிக்கிறோம். தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கூடாது. என் மகளைபோன்ற முடிவை எந்த மாணவியும் தேடிக்கொள்ள வேண்டாம். எங்கள் நிலைமை இனி எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது என கண்ணீர் மல்க உருக்கத் துடன் கூறினார். 

Next Story