சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2018 9:00 PM GMT (Updated: 7 Jun 2018 8:25 PM GMT)

சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தென்காசி, 

சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

சாரல் மழை

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் கடந்த வாரம் தொடங்கியது. சீசன் தொடங்கிய 4 நாட்கள் கழித்து சாரல் மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீர் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் குறைந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இடையிடையே இதமான வெயிலும் அடித்தது. குளிர்ந்த காற்று வீசுகிறது. இந்த ரம்மியமான சூழல் குற்றாலம் மட்டுமல்லாமல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, புளியரை, அச்சன்புதூர், வடகரை உள்பட பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

சாரல் மழை பெய்வதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து சென்றனர். இந்த சாரல் மழை இன்னும் நீடித்தால் இன்னும் 2 நாட்களில் சீசன் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story