காரிமங்கலம் அருகே போலி டாக்டர் கைது


காரிமங்கலம் அருகே போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2018 11:00 PM GMT (Updated: 7 Jun 2018 9:06 PM GMT)

காரிமங்கலம் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின்பேரில், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பொன்னுராஜ் தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களின் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காரிமங்கலம் ஒன்றியம் கேத்தனஅள்ளி ஊராட்சி கெட்டூரில் அலோபதி மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, நலப்பணிகள் அலுவலக கண்காணிப்பாளர் சசிகுமார், உதவியாளர் ராஜேஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கெட்டூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு வீட்டில் அலோபதி மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவரது பெயர் தாண்டவன் (வயது 37) என்பதும், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சின்னகரடியூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் நடத்தி வந்த கிளினிக்கை சோதனை செய்தபோது அங்கு அலோபதி மருத்துவர்கள் பயன்படுத்தும் ஏராளமான ஊசி மருந்துகள், சிரிஞ்சுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் அலோபதி மருத்துவம் படிக்காமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு அலோபதி ஊசிமருந்துகளை செலுத்தி மருத்துவம் பார்த்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ குழுவினர், போலி டாக்டர் தாண்டவன் நடத்தி வந்த கிளினிக்குக்கு சீல் வைத்தனர். பின்னர் அவரை காரிமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் தாண்டவன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Next Story