நான்கு வழிச்சாலையால் கிராமங்கள் அழியும் அபாயம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு


நான்கு வழிச்சாலையால் கிராமங்கள் அழியும் அபாயம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 Jun 2018 11:08 PM GMT (Updated: 7 Jun 2018 11:08 PM GMT)

பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலை பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதால் கிராமங்கள் அழியும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பரமக்குடி,

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. பாலங்கள் கட்டும் பணிகள் மட்டும் இன்னும் முடியாமல் இருப்பதால் போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பரமக்குடி அருகே வாகைக்குளம் கிராமத்தில் இருந்து அரியனேந்தல் பின்புறம் சிட்கோவுக்கு பின்னால் மீண்டும் நான்கு வழிச்சாலை தொடங்கி நென்மேனி ரோட்டின் வடபகுதியில் குடியிருப்புகள் வழியாக பொட்டிதட்டி, ஆவரேந்தல் சென்று ராம நாதபுரம் புறவழிச்சாலையில் இணைகிறது.

இதனால் பரமக்குடி அருகே உள்ள அருள்நகர், இந்திரா நகர், ஆவரேந்தல் ஆகிய கிராமங்களில் ஏராளமான வீடுகள் இடிக்கப்படும் நிலையில் உள்ளது. அதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அடையாள கற்களும் நடப்பட்டுஉள்ளன. இதனால் ஏராளமான கிராமங்கள், விவசாய நிலங்கள், வீடுகள் அழிந்து விடும்.

இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீடுகள் இடிக்கப்படாமல் மாற்று இடத்திற்கு என்ன வழி என்றும், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நிலை என்ன என்றும் அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

தற்போது உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 60 மீட்டர் வரை அரசு இடங்களும், புறம்போக்கு நிலங்களும் உள்ளன. அவற்றை எடுத்து அங்கு அமைத்தாலே எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நான்கு வழிச்சாலை அமைக்க முடியும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் இதற்கு மாற்று வழி ஏற்பாடு செய்யவேண்டும் என்று தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகேசன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

Next Story