அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் பதிவு செய்ய வேண்டும்


அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 7 Jun 2018 11:18 PM GMT (Updated: 7 Jun 2018 11:18 PM GMT)

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர தனித்தேர்வர்கள் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று முதன்மைக்கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வருகிற மார்ச்-2019-ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள மற்றும் முதன்முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வெழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும் அனைத்து தனித்தேர்வர்களும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவுசெய்து கொண்டு, மாவட்டக்கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.

பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு செய்முறை தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறை தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும்.

செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத தேர்வரின் விண்ணப்பம் பொதுத்தேர்விற்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இதுதொடர்பான மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரிடம் வருகிற 30-ந்தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story