16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்


16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:15 PM GMT (Updated: 8 Jun 2018 7:36 PM GMT)

கோவையில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியதாரர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை,

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அருள்தர்மராஜ் (மாநகர தலைவர்), சுப்பிரமணியன்(கோவை தெற்கு) , தங்கராசா(கோவை வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழக அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தி உள்ளது. ஆனால் 21 மாத நிலுவை தொகையை வழங்க மறுத்து வருகிறது. இந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர் மரணமடைந்தால் அவரது ஈமச்சடங்கிற்கு குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் 20 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு முழு ஓய்வூதிய பலன்களையும் அளிக்க வேண்டும். இந்த ஆண்டு பொங்கல் பரிசு ஏ,பி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங் கப்பட வில்லை. எனவே அவர்களுக்கு தொடர்ந்து பொங்கல் பரிசு வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மாநகர அரசு பஸ்களில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்குவதுடன், புறநகர் பஸ்களில் பயணிக்க 50 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர்கள் சுசீலா, கந்தசாமி, நாராயணசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story