தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் மேலும் 2 அதிகாரிகள் உள்பட 8 பேர் இடமாற்றம்


தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் மேலும் 2 அதிகாரிகள் உள்பட 8 பேர் இடமாற்றம்
x
தினத்தந்தி 8 Jun 2018 9:00 PM GMT (Updated: 8 Jun 2018 7:44 PM GMT)

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் மேலும் 2 அதிகாரிகள் உள்பட 8 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் மேலும் 2 அதிகாரிகள் உள்பட 8 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டுக்கு, தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலர் சந்திரன் மற்றும் துணை தாசில்தார்கள் சேகர், கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோட்ட கலால் அலுவலர் சந்திரன், தூத்துக்குடி நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 8 அதிகாரிகள்

இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் துணை தாசில்தார்களான சேகர், கண்ணன் ஆகியோரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதாவது நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், தூத்துக்குடி சிறப்பு துணை தாசில்தாராக (தேர்தல்) பணியாற்றி வந்த சேகர் ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை தாசில்தாராகவும், தூத்துக்குடி மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வந்த கண்ணன் கயத்தாறு மண்டல துணை தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல்–2 பிரிவில் துணை தாசில்தாராக இருந்த சிவகுமார் மாவட்ட கலெக்டர் அலுவலக டி–பிரிவு தலைமை உதவியாளராகவும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த வடிவேல்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளராகவும், கயத்தாறு மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன் ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தாராகவும், ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் ஆனந்த் தூத்துக்குடி மண்டல துணை தாசில்தாராகவும், ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை தாசில்தாராக இருந்த ராமகிருஷ்ணன் தூத்துக்குடி தனித்துணை தாசில்தாராகவும் (தேர்தல்) மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய செல்வபூபதி துணை தாசில்தார் நிலையில் பதவி உயர்வு பெற்று ஸ்ரீவைகுண்டம் தலைமையிடத்து துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த அதிரடி நடவடிக்கைக்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று பிறப்பித்துள்ளார்.


Next Story