அரசு தோட்டக்கலை பண்ணையின் கட்டுமானப்பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்


அரசு தோட்டக்கலை பண்ணையின் கட்டுமானப்பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:30 PM GMT (Updated: 8 Jun 2018 8:03 PM GMT)

வெங்கலம் அரசு தோட்டக்கலை பண்ணையின் கட்டுமானப்பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று வேளாண்மை பொறியியல் துறையினருக்கு கலெக்டர் சாந்தா உத்தரவிட்டார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெங்கலம் கிராமத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2014-15-ம் ஆண்டு புதிதாக அரசு தோட்டக்கலை பண்ணை அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பெற்று, தோட்டக்கலை பண்ணையின் கட்டுமானப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. அந்த கட்டு மானப்பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.

தற்போது தோட்டக்கலைப்பண்ணை அலுவலகம் மற்றும் குடோனுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றது. தோட்டக்கலைப்பண்ணைக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தினையும், கட்டுமானப்பணிகளையும் பார்வையிட்ட கலெக்டர் சாந்தா கட்டுமானப்பணிகளின் நிலை குறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர் களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பணிகளை துரிதப்படுத்தி 2 மாத காலத்திற்குள் விரைந்து முடித்திட வேளாண்மை பொறியியல் துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அரசு தோட்டக்கலை பண்ணையின் கட்டுமான பணிகள் குறித்து கலெக்டர் சாந்தா கூறுகையில், “புதிய அரசு தோட்டக்கலை பண்ணைக்கு 4.72 எக்டர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, தற்போது வேளாண் பொறியியல் துறையின் மூலம் நிலம் தயார் செய்தல், போர்வெல் மற்றும் குழாய் அமைத்தல், கம்பி வேலி அமைத்தல், அலுவலக கட்டிடம், பசுமை குடில், நிழல் வலை குடில் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த தோட்டக்கலை பண்ணை மூலமாக தரமான காய்கறி குழித்தட்டு நாற்றுகள் மற்றும் மா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற பழப்பயிர்களின் வீரிய ரக ஒட்டுச்செடிகளை தயார் செய்து திட்டப்பணிகளுக்கும் மற்றும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய இயலும்” என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story