வாழை பயிர்களை பாதுகாக்க கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்


வாழை பயிர்களை பாதுகாக்க கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jun 2018 9:15 PM GMT (Updated: 8 Jun 2018 8:17 PM GMT)

வாழை பயிர்களை பாதுகாக்க கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நெல்லை, 

வாழை பயிர்களை பாதுகாக்க கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நெல்லை கோட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவி கலெக்டர் மைதிலி தலைமை தாங்கினார். இதில் நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நெல்லை, பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டு இருக்கும் வாழை பயிர்களை பாதுகாக்கும் வகையில், மணிமுத்தாறு அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நஷ்டஈடு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சங்கரன்கோவில் வட்டார செயலாளர் குருசாமி உதவி கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “சங்கரன்கோவில் அருகே வடக்குபுதூர் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். அவர்களது நிலத்தின் அருகில் தனியார் கல்குவாரி அமைப்பதற்கு முயற்சி நடந்து வருகிறது. இதனால் விவசாயம் மற்றும் பொது வழிபாதை பாதிக்கப்படும். கல்குவாரி நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்து விட்டு, விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

நெல்லை அருகே உள்ள கருங்காட்டை சேர்ந்த மாடசாமி என்பவர் கொடுத்த மனுவில், “கடந்த 2016-ம் ஆண்டு நெல் பயிருக்கு காப்பீடு செய்திருந்தேன். ஆனால் அப்போது கடும் வறட்சி ஏற்பட்டு பயிர் கருகி விட்டபோதிலும், பயிர் காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதேபோல் கடந்த ஆண்டு ஒகி புயலின்போதும், கடந்த மார்ச் மாதம் சூறைக்காற்று வீசியபோதும் சேதம் அடைந்த வாழை பயிர்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த கூட்டத்தில் தாலுகா மற்றும் யூனியன் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story