புதுச்சேரி பட்ஜெட்டிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் நாராயணசாமி நம்பிக்கை


புதுச்சேரி பட்ஜெட்டிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் நாராயணசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2018 11:45 PM GMT (Updated: 8 Jun 2018 8:33 PM GMT)

புதுச்சேரி பட்ஜெட்டிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காததை தொடர்ந்து புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் சட்டமன்ற கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. புதுவை பட்ஜெட் தொடர்பாக மத்திய அரசு எழுப்பிய சந்தேகங்களுக்கு நேரில் சென்று விளக்கம் அளிப்பேன் என்ற முதல்–அமைச்சர் நாராயணசாமி டெல்லிக்கு சென்றிருந்தார்.

அங்கு அவர் உள்துறை இணை செயலாளர் கோவிந்த் மோகனை சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்திக்க திட்டமிட்டிருந்த அவர் ராஜ்நாத்சிங் டெல்லியில் இல்லாததால் அவரை சந்திக்காமல் புதுச்சேரி திரும்பினார்.

புதுவை வந்த முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் நிருபர்கள் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:–

மத்திய அரசு கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் பங்களிப்பு கொண்டு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி தருகிறது. சில திட்டங்கள் முழுமையாக மத்திய அரசின் நிதியோடு செயல்படுத்தப்படும்.

பங்களிப்பு திட்டங்களில் தோராயமாக மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும். அதனடிப்படையில் அந்த துறைகளின் பட்ஜெட்டிற்கு ஏற்ப மத்திய அரசும் நிதிகளை ஒதுக்கும்.

புதுவை அரசு கேட்கும் நிதி கிடைக்காவிட்டால் மத்திய அரசு வழங்கும் நிதியில் துண்டு விழும் நிதியை மாநில நிதியில் இருந்து ஒதுக்கி திட்டங்கள் நிறைவேற்றப்படும். இதுதான் நடைமுறையில் உள்ளது. அதை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி உள்ளேன்.

எனவே மத்திய அரசு நமது பட்ஜெட்டிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும். அனேகமாக வருகிற திங்கட்கிழமை ஒப்புதல் வந்துவிடும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story