ஊதிய உயர்வு கோரி அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் மராட்டியம் முழுவதும் பயணிகள் பரிதவிப்பு இன்று பஸ்கள் ஓடுமா?


ஊதிய உயர்வு கோரி அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் மராட்டியம் முழுவதும் பயணிகள் பரிதவிப்பு இன்று பஸ்கள் ஓடுமா?
x
தினத்தந்தி 8 Jun 2018 11:00 PM GMT (Updated: 8 Jun 2018 10:03 PM GMT)

ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீ ரென வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் பரிதவித்தனர்.

மும்பை, 

ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீ ரென வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் பரிதவித்தனர்.

அரசு போக்குவரத்து கழகம்

நாட்டிலேயே மிகப்பெரிய போக்குவரத்து கழகமாக மராட்டிய அரசு போக்குவரத்து கழகம் திகழ்கிறது. மராட்டியத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 17 ஆயிரத்து 500 பஸ்களை கொண்டு 56 ஆயிரத்து 756 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மாநில போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

டீசல் விலை உயர்வு, ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி கடந்த சில தினங்களுக்கு முன் பஸ் கட்டணத்தை 18 சதவீதம் வரை போக்குவரத்து கழகம் உயர்த்தியது.

திடீர் வேலை நிறுத்தம்

இந்தநிலையில், ஊதிய உயர்வு கோரி நேற்று போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்களின் ஒரு பகுதியினர் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். 70 சதவீத ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற் றதாக கூறப்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழு வதும் அரசு பஸ் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.

குறிப்பாக மும்பையில் பரேல், குர்லா, மும்பை சென்டிரல், நவிமும்பையில் உரண், பன்வெல் ஆகிய இடங்களில் உள்ள டெப்போக்களில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங் களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

பயணிகள் பாதிப்பு

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கோடை விடுமுறையில் இருந்த ஏராளமானவர்கள் ஊர் திரும்புவதற்காக அரசு பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் பஸ் நிலையங்களில் திரண்டனர். இந்தநிலையில், ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பஸ்கள் ஓடாதது தெரியவந்ததால் எப்படி ஊருக்கு செல்வது என்பது தெரியாமல் பரிதவித்தனர்.

குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் வந்தவர் கள் மிகுந்த அவதிக்குள்ளா னார்கள்.

பஸ்களை மறித்து போராட்டம்

அதே நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் வழக்க ம்போல பணிக்கு வந்து பஸ்களை இயக்கினார்கள். அந்த பஸ்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெப்போக் களில் இருந்து வெளியே வந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பரோல் டெப்போவில் இருந்து வெளியே வந்த பஸ்களை மறித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் பஸ்களை மறித்தவர்களை அப்புறப்படுத்தினார்கள். அப்போது பஸ் ஊழியர் ஒருவர் உடலில் மண்எண் ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்றுக் கொள்ள முடியாது

இதுபற்றி அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், போக்குவரத்து ஊழியர்கள் திடீரென வேைல நிறுத்தம் செய்ததால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

வேலை நிறுத்தம் தொடர்பாக ஊழியர்கள் சங்கத்திடம் இருந்து எந்த அறிவிக்கையும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே எந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பது கூட எங்களுக்கு தெரிய வில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கண்டு கொள்ளவில்லை

பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை மராட்டிய மாநில போக்குவரத்து ஊழியர் சங்கட்னா அமைப்பின் முன்னாள் செயலாளர் ராஜன் எவ்லே நியாயப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், மாநில போக்குவரத்து ஊழியர்கள் மாதம் சம்பளமாக ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரம் வரை தான் வாங்குகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆனால் அது தான் உண்மை. அவர்கள் வேலை காரணமாக மாதத்தில் 15 நாட்கள் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கடந்த 2 வருடமாக ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை போக்கு வரத்து கழகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது, என்றார். கடந்த ஆண்டு தீபாவளியின் போது, 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் படி சம்பள உயர்வு கேட்டு போக்குவரத்து கழக ஊழியர்கள் 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் மாநிலத் தில் அரசு பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது நினைவுகூரத்தக்கது.

பஸ் ஊழியர்கள் நேற்று நடத்திய திடீர் வேலை நிறுத்தத்தால் பயணிகள் பரிதவித்த நிலையில், இன்று (சனிக்கிழமை) பஸ்கள் வழக்கம் போல ஓடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story