சென்னையில் இருந்து 12 பாஸ்போர்ட்டுகளுடன் கத்தார் செல்ல முயன்றவர் கைது


சென்னையில் இருந்து 12 பாஸ்போர்ட்டுகளுடன் கத்தார் செல்ல முயன்றவர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2018 10:29 PM GMT (Updated: 8 Jun 2018 10:29 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் இருந்து 12 பாஸ்போர்ட்டுகளுடன் கத்தார் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை கத்தாருக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற வந்தவர்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன்(வயது 55) என்பவரிடம் இருந்த பையில் ஒரு பார்சல் இருப்பதை கண்ட குடியுரிமை அதிகாரிகள், சந்தேகத்தின்பேரில் அதை பிரித்து பார்த்தனர். அதில் 12 பாஸ்போர்ட்டுகள் இருந்தன.

அதுபற்றி கேட்டபோது, அது தனது உறவினர்களின் பாஸ்போர்ட்டுகள் என மணிவண்ணன் கூறினார். ஆனால் பாஸ்போர்ட்டுகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவை பல்வேறு மாநிலங்களில் இருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது. எனவே அவை போலி பாஸ்போர்ட்டுகளாக இருக்குமோ? என அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து மணிவண்ணனின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து, மேல் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Next Story