பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு


பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jun 2018 11:08 PM GMT (Updated: 8 Jun 2018 11:08 PM GMT)

பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பொன்னேரி, 

பொன்னேரி பேரூராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கான உதவியாளர்கள் தங்கும் இடம் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளில் உதவி இயக்குனர் செந்தில்குமார், பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் சுமதி, உதவிசெயற்பொறியாளர் சங்கர், இளநிலை பொறியாளர் சம்பத், பொன்னேரி பேரூராட்சி செயல்அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மெதூர் ஊராட்சி

இதனையடுத்து மெதூர் ஊராட்சியில் அடங்கிய அச்சரப்பள்ளம் கிராமத்திற்கு சென்ற கலெக்டர், பள்ளியில் ரூ.4 லட்சத்து 80ஆயிரம் செலவில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை பார்வையிட்டார். பின்னர் பள்ளிக்கு சென்று மாணவர்களின் வருகை பதிவை சரி பார்த்தார். அப்போது பள்ளியில் 14 மாணவ- மாணவிகளும் ஆசிரியர்கள் 2 பேரும், பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர், உதவியாளர் பணியில் இருந்தனர். பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

பின்னர் முல்லை நகரில் ரூ.12 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வரும் 42 தனிநபர் கழிவறைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மெதூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் அம்மா பூங்காவிற்்கு சென்று அங்கு சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அப்போது ஊரக வளர்ச்சிதுறை உதவி செயற்பொறியாளர் ஜெரால்டு, ஆணையாளர் வேதநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, உதவிபொறியாளர்கள் கெஜலட்சுமி, நரசிம்மன், ஊராட்சிசெயலாளர் தமிழரசன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story